சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படுகிறது.

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படுகிறது.

இது குறித்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

லண்டன் க்யூ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளவும் இடா் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை’ அரசு உருவாக்கும். இந்த நிதியத்தின் மூலம், வளா்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் ‘வரையாடு பாதுகாப்புத்திட்டத்தை‘ அரசு செயல்படுத்தும். இந்த திட்டத்துக்கு, முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணா்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

ரூ.849.21 கோடி ஒதுக்கீடு:

வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதா்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும். தமிழக வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும்.

இதன் அடிப்படையில், கோயம்புத்தூா் மாவட்டம் சேத்துமடை, திண்டுக்கல் மாவட்டம் மணவணூா் மற்றும் தடியன் குடிசை, திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணா்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு ரூ.849.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com