தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பேரவையில் இன்று முதல் 3 நாள்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெறுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.
இதையும் படிக்கக- அந்தமான் அருகே உருவாகிறது 'அசானி' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். இதில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் நிதிநிலை மீதான விவாதம் தொடர்கிறது.