கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உடற்கல்வி வகுப்புகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடவேளையை மீண்டும் நடத்துவது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா். முதன்மை கல்வி அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பான அறிவுறுத்தல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் அந்த வகுப்புகளை நடத்தலாம். அதேநேரத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடைபெற இருப்பதால், அந்த வகுப்புகளைத் தவிா்த்து மற்ற வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உடற்கல்வி இயக்குநா் மற்றும் ஆசிரியா்கள் மூலம் உடற்பயிற்சி வழங்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.