கம்பம்: தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் அனுமதியின்றி மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்ததை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன் பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 9 ஆவது வார்டில் வெட்டுக்காடு, இந்திரா நகர், ஊமையன் தொழு ஆகிய பகுதிகள் உள்ளன.
இங்கு சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் முல்லைப் பெரியாற்று நீரேற்று நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் இரண்டு தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான பராமரிப்பு வேலைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியை சில மர்ம நபர்களால் இடித்து உடைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்து குடிநீர் தொட்டியை அனுமதியின்றி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக புதிய குடிநீர் தொட்டி அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மேல்நிலை குடிநீர் தொட்டியை அனுமதியின்றி அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.