மேட்டூர்: மேட்டூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மீது முதியவர் ஒருவர் தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
மேட்டூர் அருகே உள்ள டிசிஎம் காலனியைச் சேர்ந்தவர் பாரதி (73). வீரக்கல் புதூர் பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலர். இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மேட்டூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வந்த ஜீப் அதிவேகமாகவும் ஆரன் அடிக்காமலும் பின்னோக்கி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. போலீஸ் வாகனம் வேகமாக வந்ததை பார்த்த மக்கள் சிதறி ஓடினார்கள்.
அப்போது, ஜீப்பில் இருந்து இறங்கி வந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியும், ஓட்டுநர் பாபுவும் வழக்கு எதுவும் வேண்டாம், மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து கொடுத்து விடுகிறோம் என்று போலீசார் மூலம் வாகனத்தை எடுத்துச் சென்றனர். மூன்று மாதமாகியும் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து கொடுக்கவில்லை.
புதூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பாரதி (73)
இதுகுறித்து ஆய்வாளர் விஜயலட்சுமி, போலீஸ் வாகன ஓட்டுநர் பாபு ஆகியோரிடம் முதியவர் பாரதி பலமுறை முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளரும், ஓட்டுநரும் முதியவரை மிரட்டியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும், தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
அதில், தனது மோட்டார் சைக்கிளை காவல்துறையினரிடம் இருந்து மீட்டு கொடுக்கும்படியும், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அந்த புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுவிட்டு முதியவரை மிரட்டும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது காவல்துறை தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.