முதல்வரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை கண்டிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் அரசு முறைப் பயணமாக துபை சென்றுள்ளார்.
துபையில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதலமைச்சர் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை “ரூ5000 /= மர்மப் பயணம்” “முதலமைச்சர் துபை பயண மர்மம்” என்றெல்லாம் அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவெறுப்புத் தரும் அநாகரிக அரசியலாகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.