மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதுதொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில், ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தாங்கள் வாசித்ததாகவும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும் தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தாங்கள் உறுதிமொழி ஏற்றதாகவும் மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரிக்கு இன்று நேரில் சென்றுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.ரத்தினவேல், துணை முதல்வர், மாணவர் பேரவை தலைவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.