ஆவடி: அம்பத்தூர் அருகே தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், எல்லை அம்மன் நகர், 2 ஆவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேட்டு (50). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை மதியம் இதே பகுதியில் வசித்த சேட்டு தம்பி சுரேஷ் (42) வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் சேட்டு மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சேட்டு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் முன் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் ஜோதிகுமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதே நாளில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.