சென்னை: தமிழகத்தில் புதிதாக 10 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும், நெல்லையப்பர் கோயிலில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக்கோரிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
10 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும். நெல்லையப்பர் கோயிலில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தி, முக்கிய திருவிழா நாள்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
14 திருக்கோயில்களில் ரூ.11 கோடியில் அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.
பிரசாதம் வழங்கும் திட்டம் மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
8 கோயில்களில் யானைகளுக்கு குளியல் தொட்டிகள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழில் அர்ச்னை செய்யும் அர்ச்சகர்களை ஊக்கவிக்க சிறப்புக் கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் 60% அர்ச்சகருக்கு பங்குத்தொகையாக வழங்கப்படும்.
மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.