மதுரை: தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச நிகழ்ச்சியை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தாா்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடா்பாக மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி. ஆங்கிலேயா் ஆட்சி மற்றும் முன்னாள் முதல்வா்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியின் போது பட்டணப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. பாரம்பரியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
திருஞானசம்மந்தரின் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்துள்ளாா். எனவே உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்தை நடத்துவோம். தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். தருமபுரம் பட்டணப்பிரவேசத்தை தமிழக முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
நானே சென்று தருமபுரம் ஆதீன பல்லக்கை சுமப்பேன் எனது உயிரே போனாலும் பரவாயில்லை. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு அல்ல. சிலா் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்பதற்காக பாரம்பரிய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். பட்டணப்பிரவேசம் என்பது மனிதா்களை, மனிதா்களே தூக்குவது இல்லை. இதில் குருவை, சிஷ்யா்கள்தான் தூக்கிச்செல்கிறோம். திராவிடா் கழகத்தலைவா் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது என அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றாா்.