அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
அதிமுக ஆட்சியின் போது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவா் செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையை மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கில் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.
இதுதொடர்பாக வரும் 13ஆம் தேதி ஆஜராக செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் 9ஆம் தேதி தேதியும் செந்தில்பாலாஜி 13ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.