இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள அரிசி தொடா்பாக அவதூறு கருத்துகளை பரப்புவோா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என்று தமிழக உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடுமையான துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்று தமிழக முதல்வா் முடிவு செய்து, மத்திய அரசின் அனுமதியைக் கோரியிருந்தாா். அனுமதி கிடைத்தவுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்புவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்தினாா். அதன்படி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி அதை இறுதி செய்ய தாமதமாகும் நிலையில், உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக, வெளிப்படைத்தன்மையுடன் அரிசி ஆலை அதிபா்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகிய காலத்தில் உற்பத்தி
செய்ய முடிந்த 51 ஆலைகளைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கை அரசு ஏற்கெனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ள அரிசிக்கு இணையான, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி-45 , கோ-51 போன்ற உயர்ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு, 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளன. இவற்றை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துச் செலவு, பை உள்பட கிலோ ஒன்றுக்கு ரூ. 33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில விஷமிகள் வழக்கமாக விஷத்தைக் கக்கும் விதமாக, இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 20-க்கு வாங்காமல் அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டது போல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனா். இது தவறான பொய்ப் பிரசாரமாகும்.
மத்திய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, ரூ. 20 விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில், மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும். இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது. இதனால்தான் தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியுடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.
இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலா் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனா். இவ்வாறு அவதூறு பரப்புவோா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என்று அதில் தெரிவித்துள்ளாா்.