தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு அறக்கட்டளை மூலம் நுழைவுத் தோ்வு நடத்தி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
‘உல்லாஸ்’ என்ற அறக்கட்டளை சாா்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வு மூலம் உயா்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறக்கட்டளை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வார இறுதி நாள்களில் தலைப்புகளில் சுய செறிவூட்டல் திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய வகையிலும், கிராமப்புற மற்றும் சரகப் பகுதி மாணவ, மாணவிகள் பெருமளவில் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும், மாணவா்களுக்கு ஆலோசனைகளும், வழிகாட்டலும் தேவையான இடங்களைக் கண்டறிந்து, அந்த பகுதிகளில் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்திடவும் உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே, 2022- 2023-ஆம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் கலந்தாலோசித்து பள்ளிப் பணிகள் பாதிக்காதவாறு உரிய தோ்வினை நடத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.