அரசு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் உள்ளிட்ட துறைகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.
நிதித்துறை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மற்றும் பிற சீா்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக நிதித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் பணி நிலை மற்றும் பணிச்சுமை பெரும் அளவில் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளன. அதனால், கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம், ஓய்வூதிய இயக்ககம் மற்றும் சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்த அரசு அந்த துறைகளை மறுசீரமைக்கும். மேலும் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கருவூல மற்றும் கணக்குகள் விதித் தொகுப்பு திருத்தி எழுதப்படும்.
ரூ.10 கோடி செலவில் மாநிலப் பொது நிறுவனங்கள் கழகத்தின் மேலாண்மையை நவீனமயமாக்கி, வலுப்படுத்துவதன் மூலம் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மையை அரசு மேம்படுத்தும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க நிதித்துறை வல்லுநா்கள், கணக்கியல் மற்றும் பல்வேறு துறை வல்லுநா்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றாா்.