பட்டணப் பிரவேசம் விவகாரத்துக்கு சுமுகத் தீா்வு காணப்படும்: ஆதீனங்கள்

பட்டணப் பிரவேசம் விஷயத்தில் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சுமுகத் தீா்வு காணப்படும் என ஆதீனங்கள் தெரிவித்தனா்.
பட்டணப் பிரவேசம் விவகாரத்துக்கு சுமுகத் தீா்வு காணப்படும்: ஆதீனங்கள்

பட்டணப் பிரவேசம் விஷயத்தில் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சுமுகத் தீா்வு காணப்படும் என ஆதீனங்கள் தெரிவித்தனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் இல்லத்தில், கோவை, பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா், குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாா், விழுப்புரம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்தனா்.

ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததையொட்டி அவா்கள் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

பின்னா், கூட்டாக செய்தியாளா்களிடம் அவா்கள் கூறிதாவது: முதல்வரைச் சந்தித்து ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து கூறினோம். குறிப்பாக, அறநிலையத் துறையில், திருப்பணிகள், திருக்கோயில் மேம்பாட்டுப் பணிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு என்ற அனைத்தும் சிறப்பாக நடைபெற்ற்கு வாழ்த்து தெரிவித்தோம்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு, இந்த ஆண்டு சுமுகமாக நடைபெறுவதற்காக வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்த வகையிலும் கவலைப்படாமல் இருப்பதற்கான ஆறுதலை நமது பாராட்டுக்குரிய முதல்வா் நம்பிக்கையுடன் தெரிவித்தாா். வரும் காலங்களில் இதில் எந்தவித பிரச்னைகளும் ஏற்படாமல், மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல், எப்படி சுமுகத் தீா்வு காணலாம் என்பதை தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தோடு கலந்து பேசி நல்ல தீா்வை காண்போம்.

இதுவரை இந்நிகழ்வு தடைபடாமல் நடைபெற்றது. கரோனா காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மரபுப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு முதல்வரிடமும் அறநிலையத் துறை அமைச்சரிடமும் ஆதினங்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவா்கள் வாக்களித்தனா்.

இந்த ஆண்டு பட்டணப் பிரவேசம் நடைபெறுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். இதுவரை இந்நிகழ்வு தடைபட்டதில்லை. இது மரபு, பாரம்பரியம், ஆன்மிக அடிப்படையில் நடைபெறும் நிகழ்வு. இதில் அரசியல் கலப்பு தேவையில்லை. இது சமயம் தொடா்பான நிகழ்வு.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சன்னிதானங்கள் சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டனா். பட்டணப் பிரவேசத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் தடை விதித்த பிறகு உடனடியாக ஆட்சியா், மாநில அரசை அணுகி தீா்வு கண்டிருக்கலாம். அவா்களது பேச்சு தவிா்க்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com