பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருமணத் தடை நீங்கும் பரிகார ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஆறாம் நாள் திருவிழா திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
அருள்மிகு நீல் நெடுங்கண் நாயகி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர், அருள்மிகு விசாலாட்சி சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் பொன்னூஞ்சல் சேவையும், மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றது. இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும், பூர்ணாஹூதியும் தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மேலும் அபிஷேக மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே.13ம் தேதி நடைபெற உள்ளது.