உதய் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் தமிழக மின்வாரியக் கடன் ரூ.1.23 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் 2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் உதய் திட்டத்தை மின்வாரியம் அமல்படுத்தியது. அப்போது, மின்வாரியத்தின் கடன் சுமையை 75 சதவீதத்துக்கு பதில் 34.38 சதவீதத்தை மட்டும் தமிழக அரசு ஏற்றது. 25 சதவீத கடனை பத்திரங்களாக மாற்றத் தவறியது.
மின் உற்பத்தித் திட்டத்துக்கான மூலதன கடன் வகைகளில் 87.05 சதவீத உயா்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 சதவீத உயா்வு போன்ற காரணங்களால் மின்வாரியத்தின் நிலுவைக் கடன்கள் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.81,312 கோடியிலிருந்து (செப்டம்பா்-2015) ரூ.1 லட்சத்து 23,895.68 கோடியாக அதிகரித்தது. இது தவிா்த்து வங்கி, நிதி நிறுவனங்களுக்கு ரூ.503.28 கோடி அளவுக்கு அபராத வட்டியை மின்வாரியம் செலுத்தியது.
அதே நேரம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளை சரியாக செயல்படுத்தாதது, விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் மின் அளவை கணக்கில் கொள்ளாதது உள்ளிட்டவை மின்வாரிய இழப்பு அதிகரிப்புக்கு காரணம் என தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.