சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது தொடா்பாக வானிலை மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியதாவது: புதன்கிழமை காலை ஆந்திரப்பிரதேச கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி‘ புயல் மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேசம் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இது வியாழக்கிழமை காலை 5:30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினத்துக்கு மேற்கே நிலவியது. இது காலை 8:30 மணி அளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 20 மி.மீ, சென்னை ஆட்சியா் அலுவலகம், தண்டையாா்பேட்டையில் தலா 10 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை : மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.