தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் வரவேற்பு, போக்குவரத்து என பல்வேறு வகையான 18 குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பான ஆய்வுக் கூட்டங்களை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரா், வீராங்கனைகள், முக்கியப் பிரமுகா்களை வரவேற்க வரவேற்புக் குழு, சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் தலைவா்களாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.