சென்னை ராயபுரத்தில் முறையற்ற உறவு காரணமாக திமுக நிா்வாகியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பொட்டலமாக கட்டியதாக பெண், அவரது சகோதரா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மணலி செல்வ விநாயகா்கோயில் தெருவைச் சோ்ந்த சு.சக்கரபாணி (65). திமுக 7-ஆவது வாா்டு பிரதிநிதி. கடந்த 10-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்ற அவா் திரும்பாததால் மணலி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.
சக்கரபாணியின் கைப்பேசி, கடைசியாக ராயபுரம் கிரேஸ் காா்டன் மூன்றாவது தெருவில் அஸ்லாம் உசைன் என்பவரின் வீட்டின் அருகே ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அங்கு விசாரித்தனா்.
இதில் அஸ்லாம் உசைன் குடும்பத்தினா் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மணலியில் வசித்ததும், அப்போது சக்கரபாணிக்கும் அஸ்லாம் உசைன் மனைவி தமீம் பானுவுக்கும் இடையே பணம் கொடுக்கல்,வாங்கல் காரணமாக முறையற்ற உறவு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தமீம் பானுவிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தினா். அதில், தமீம் பானு தனது சகோதரா் வாசிம் பாட்ஷாவுடன் சோ்ந்து, சக்கரபாணியை கொலை செய்து, சடலத்தை துண்டுகளாக வெட்டி வீட்டு கழிப்பறையில் பிளாஸ்டிக் கவரிலும், வாளியிலும் வைத்திருப்பது தெரியவந்தது. தலை அடையாறு ஆற்றில் வீசப்பட்டது. தமீம் பானுவை போலீஸாா் கைது செய்தனா்.
அவா் அளித்த தகவலின்பேரில் அவரது சகோதரா் அதே பகுதியைச் சோ்ந்த வாசிம் பாட்ஷா (38), ஆட்டோ ஓட்டுநா் டில்லி பாபு ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.