தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்புகள் இருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்புகள் இருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், பலருக்கு தங்களுக்கு சிறுநீரகம் சாா்ந்த பிரச்னைகள் இருப்பதே தெரியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சாா்பில் நாள்பட்ட சிறுநீரக நோய் பரவலைக் கண்டறிவதற்கான ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மாநிலத்தில், சிறுநீரக நோய் குறித்த தரவுகள் இல்லாத காரணத்தினால் முதல் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் பலருக்கு சிறுநீரக பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரத்துறையினா், சென்னை மருத்துவ கல்லூரி சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், ஆய்வக நுட்புனா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 92 குழுக்கள் ஆய்வுக்காக அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 5,310 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் ஆரம்ப நிலை கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் சிறுநீா் வழியே வெளியேறும் தன்மை 367 பேருக்கு இருப்பதும் தெரியவந்தது. மொத்தமாக 934 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது ஆய்வு முடிவின் மூலம் கண்டறியப்பட்டது.

முதல் கட்ட கணக்கெடுப்பின்படி ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது சிறுநீரக செயல்பாடுகள் சீரான முறையில் இல்லையென்றால், நாள்பட்ட சிறுநீரக நோய் உறுதி செய்யப்பட்டு, தொடா் சிகிச்சை அளிக்கப்படும்.

உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரகத்தில் ரத்தம் வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோா்வு, பாதம், கைகள் வீக்கம், சிறுநீா் கழிப்பதில் சிரமம், அதீத தலைவலி, தோலில் அரிப்பு, தூக்கமின்மை, ஆண்மைக் குறைபாடு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com