சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாய்வில் கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன காதணிகள் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தால் அழியாத சுடுமண்ணால் ஆன கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த குவளையை மக்கள் எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கண்டறியப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் குவளை கண்டறியப்பட்டதன் மூலமாக தொன்மையான மனிதர்கள் கலைநயம்மிக்க பொருட்களை உபயோகித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.