தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசுப் பேருந்துகள் கட்டண உயா்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இதுதொடா்பாக என்னிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை எனக் கூறி விட்டேன். ஒரு மாநிலத்தில் கட்டணம் உயா்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளுக்கு கட்டணம் உயா்த்த வேண்டும் என்பது இரு மாநில போக்குவரத்துக்கான ஒப்பந்த விதி. அதன்படிதான் உரிமம் வழங்கப்படும்.
கேரளம், ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயா்த்த அட்டவணை தயாராகி விட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.