லோயர் கேம்பிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்ந்து திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்த நிலையில், புதன்கிழமை முல்லைப்பெரியாற்றங்கரை வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
தகவல் கிடைத்ததும் முல்லைச்சாரல் விவசாய சங்கம் ஜெயபால், கொடியரசன், ஜெகன், தெய்வம், பாரதிய கிசான் சங்கம் டாக்டர் சதீஷ் பாபு, கூடலூர் விவசாய சங்கம் செங்குட்டுவன், அனைத்து விவசாய சங்கம் செந்தில் மற்றும் சலவை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தச் சென்றனர்.
அவர்களை உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் வண்ணான்துறை பகுதிக்கு செல்ல விடாமல், குறுவனூத்து பாலம் அருகில் தடுத்து நிறுத்தினர்.
அதன் பின்னர் பூமி பூஜை முல்லைப் பெரியாற்றங்கரை வண்ணான் துறையில் நடைபெற்றது.
விழாவில் பெரியாறு வைகை பாசன மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு, மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, பெரியாறு வைகை பாசன உத்தமபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 ஆண்டுகளுக்கு பின்: கடந்த அதிமுக ஆட்சியில், 2018 ஆம் ஆண்டு லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், மதுரையில், 2020, டிச.11 இல் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, ரூ.1.020 கோடி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார்.
அதன் பின்னர் ஆய்வு பணிகள் நடைபெற்றது. ரூ.1,020 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டம் காலதாமதத்தால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.1.296 கோடியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது.
2018 இல் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது 2022 இல் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பூமி பூஜைக்கு பின்னர் சலவைத் தொழிலாளர்கள் இந்த இடம் எங்களுக்கு பட்டாவில் உள்ளது என்று தெரிவித்தனர் அவர்களிடம் பேசிய வட்டாட்சியர் அர்ஜுனன் பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.