தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒருநபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை சமர்பித்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அப்போதைய அதிமுக அரசு விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 9.8.18 அன்று ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை துவங்கியது.
முதற்கட்டமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர், திரேஸ்புரம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, உள்ளிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு சாட்சிகளை விசாரணை நடத்தினர். இதுவரை 36 கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை கைது செய்தது சிபிஐ
இதில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு காலமாக நடைபெற்ற விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்த மகேந்திரன் அப்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்டு வரமுடியாத சாட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று வழங்கினார்.