பெட்ரோல், டீசல் மீதான மத்திய வரிகளை உயர்த்தியபோது கருத்து கேட்காமல், தற்போது மாநிலங்களை விலைக் குறைக்கச் சொல்வதுதான் கூட்டாட்சியா என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 8 மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 6 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார். மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சென்னையில் புதிய பெட்ரோல் விலை என்ன?
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் பதிவு:
"2014-இல் இருந்து பெட்ரோல் மீதான மத்திய வரிகளை லிட்டருக்கு ரூ. 23 (+250 சதவிகிதம்) மற்றும் டீசல் மீதான மத்திய வரிகளை லிட்டருக்கு ரூ. 29 (+900 சதவிகிதம்) உயர்த்தியபோது மத்திய அரசு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை, எந்தவொரு மாநிலங்களிடமிருந்தும் கருத்து கேட்கவில்லை.
தற்போது உயர்த்தியதிலிருந்து 50 சதவிகிதம் விலைக் குறைப்பு செய்துவிட்டு, மாநிலங்களை விலைக் குறைப்பு செய்யுமாறு அறிவுரை கூறுகிறார்கள்.
இது கூட்டாட்சியா?"