பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது.
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்.
இதையும் படிக்க- தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2015-ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000-ஐத் தாண்டிவிட்டது.
அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும். எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிட்டால், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.