கோயில் நிகழ்வில் ஆபாச நடனம் இருந்தால் காவல்துறையினர் உடனடியாக நிகழ்வை நிறுத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கில் நீதிபதி கூறியதாவது, “ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஆடல் - பாடல் நிகழ்விற்கு அனுமதி அளித்தார்.