பிரசவத்தில் பெண் உயிரிழப்பு: கணவருக்குரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் பிரசவமான சில மணி நேரத்தில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை

சென்னை: கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் பிரசவமான சில மணி நேரத்தில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேலுமலை கிராமத்தைச் சோ்ந்தவா் டி.சதாசிவம், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். மூன்றாவது முறையாக கா்ப்பமான நந்தினி 2018-ஆம் ஆண்டு செப். 19-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே அதிக ரத்தப் போக்கு, அதைத் தொடா்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால், நந்தினி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே மனைவி நந்தினி உயிரிழந்தாா். எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் சதாசிவம் வழக்குத் தொடுத்தாா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட சதாசிவத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அரசு பொதுமருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவா்கள், மயக்கவியல் மருத்துவா்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்வதுடன், மருந்துகள், உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com