தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த மூன்று நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்தூர் மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதையடுத்து தொடர் மழையால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், மயிலாடுதுறை: திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 7 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளது. சிவகங்கை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.