விழுப்புரம்: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் 1,114 பொறியியல் மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல், முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ்ப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்..
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான். பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ்மொழியை படிக்க வேண்டும் விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியை படிக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தி படிக்குமாறு கூறக்கூடாது' என்றார்.