ஒசூர் அருகே 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம்'- தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 'காவிரி தெற்குவன உயிரின சரணாலயம்' தமிழகத்தின் புதிய மற்றும் 17-வது சரணாலயமாக தமிழக அரசு அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது. 
ஒசூர் அருகே 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம்'- தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 'காவிரி தெற்குவன உயிரின சரணாலயம்' தமிழகத்தின் புதிய மற்றும் 17-வது சரணாலயமாக தமிழக அரசு அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

08.11.2022 அன்று தமிழக அரசு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக் காடுகளை காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன் கீழ் அறிவிக்கிறது. 

இந்த அரசு, கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

இந்த சரணாலயப் பகுதி நீலகிரி உயிர்கோளக் காப்பகப் பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வன உயிரின சரணாலயம், மலைமாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் - உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது.

இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்ட உயிர்பன்மைமிக்க பகுதியாக காணப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர் நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. 

இப்பகுதியானது 50 கி.மீ. தொலைவிற்கு காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக் காடுகளை உள்ளடக்கியது. இப்பகுதியினை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம், வனஉயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும் என்றும் இதன்மூலம் காவிரி ஆற்றுப்படுகையின் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com