தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகம் - கேரளம் ஆகியவற்றின் எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தைக் கேரள அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. 1956 ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தூரம் அளவுக்கே இரு மாநிலங்களின் கூட்டு சர்வே முயற்சியால் அளவிடப்பட்டுள்ளன.
ஆனால், மீதம் இருக்கக்கூடிய 627 கி.மீ. அளவுக்குக் கூட்டு சர்வே நடத்துவதற்கு கேரள அரசு ஒத்துழைக்காததினால் அந்த வேலை கடந்த 56 ஆண்டு காலமாக அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களின் பெரும்பகுதியின் எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளம் இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
கடந்த 56 ஆண்டு காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறி உள்புகுந்து பல பகுதிகளை கேரளத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுகாவில் ஏறத்தாழ 30,000 ஏக்கர் கொண்ட காட்டுப் பகுதியில் உள்புகுந்து காடுகளையும் வெட்டி, மரங்களைத் திருடிக் கொண்டு சென்றதோடு, அப்பகுதியில் ஏராளமாகக் குடியேறிவிட்டனர்.
இதன் விளைவாகக் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கேரளத்தினர் பெரும்பான்மையினராகி அவர்களில் ஒருவரே தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகி வருகின்றனர்.
இதைப்போல குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் கேரளத்தினர் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு ஆக்கிரமித்த பகுதிகளை தனக்குச் சொந்தமானது என்று காட்டுவதற்கே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பகுதிகளை நாம் இழக்க வேண்டி வரும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.