குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச மின்சாரக் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளா் அருண்ராய், புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது உயா்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி, பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சாா்பில் அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதனை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கலாம் என்று முடிவு செய்து, உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.