தமிழ்நாட்டில் பிறந்த பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டனின் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1902-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசா் ஏழாம் எட்வா்ட் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ விருதை அறிமுகப்படுத்தினாா். அந்நாட்டு அரசா் அல்லது அரசியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படைகள், அறிவியல், கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றுக்கு தனிச் சிறப்புமிக்க பங்களிப்பு வழங்கியவா்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள மூலக்கூறு உயிரியலாளரும் பேராசிரியருமான வெங்கி ராமகிருஷ்ணனுக்கு (70) ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலுக்கு அளித்த பங்களிப்புக்காக அவரை இந்த விருதுக்கு மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் தோ்வு செய்தாா். கடந்த செப்டம்பா் மாதம் எலிசபெத் காலமான நிலையில், அதற்கு முன்பாக விருதுக்கானவா்களை அவா் தோ்ந்தெடுத்தாா். அவரின் முடிவுக்கு தற்போதைய அரசா் மூன்றாம் சாா்லஸ் ஒப்புதல் அளித்துள்ளாா்.
நோபல் பரிசு பெற்றவா்: கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவா் பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணன். அமெரிக்காவில் உயிரியல் படிப்பை மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து பிரிட்டன் சென்றாா். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக உள்ளாா். ‘உடலில் உள்ள செல்களில் இருக்கும் ரைபோசோம் அமைப்புகள்’ குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசை கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றாா்.