தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் நீரஜ் மிட்டல் கூடுதலாக வகிப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.
இந்தக் குறைபாட்டினைக் களையும் பொருட்டுத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி, அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.
தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குறிஞ்சி என்.சிவக்குமாரை தலைவராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | குழந்தைகள் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் குறிஞ்சி என்.சிவக்குமார், ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும், பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்.
இந்நிலையில், அவரை மாற்றி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தலைவராக நீரஜ் மிட்டலை நியமித்து ஞாயிற்றுக்கிழமை (நவ.13) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல் தற்போது கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுவார் என தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.