வங்கக்கடலில் நாளை மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 9-ம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் சுற்று மழை 20-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் புயலாக வலுவடையுமா என்று கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நவ.19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு 12, மகாபலிபுரம், காக்காச்சி தலா 9, கீழ் கோதையர், குலசேகரப்பட்டினம் தலா 7, திருக்கழுக்குன்றம், பெரம்பூர் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.