திருச்சி: பராமரிப்புப் பணிக்குச் சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதால் திருச்சி ஜங்ஷன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த வழியாக செல்ல வேண்டிய சென்னை-குருவாயூர் பயணிகள் ரயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே யார்டு உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் துாய்மைப்படுத்தும் பணி, பராமரிப்பு, சிறிய பழுது நீக்கும் பணி உள்ளிட்டவை நடைபெறும்.
இதேபோல, புதன்கிழமை மாலை சரக்கு ரயில் ஒன்று பராமரிப்புப் பணிக்கு வந்துவிட்டு புறப்பட்டது. சிறிது தொலைவு சென்ற நிலையில் அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தரையில் இறங்கியது. அப்போது, பெரும் சத்தம் கேட்டதால், லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலர்கள், தண்டவாள பொறியாளர்கள், சிக்னல் பொறியாளர்கள், ரயில்வே பணியாளர்களும் தடம் புரண்ட இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.
மேலும், தடம் இறங்கிய பெட்டிகளின் சக்கரங்களை தண்டவாளத்தில் மீண்டும் நிலைநிறுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காரணமாக அந்த தண்டவாளத்தில் வர வேண்டிய ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை-குருவாயூர் பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.