கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
சிகிச்சையின்போது உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் வழங்கினாா். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உத்தரவையும் அவா் அளித்தாா்.
சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் அவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரியாவின் வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, அவரது பெற்றோரிடம் வழங்கினாா். பிரியாவின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் தரவு விவரங்கள் பதிவராக பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் முதல்வா் அளித்தாா்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.