சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வின் வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்குள்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில், நான்காவது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் அதிர்க்குள்ளாகினர்.
இதையடுத்து, தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் தரப்பில் பல்கலைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. எனவே, இன்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு நடைபெறும் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலை அறிவித்துள்ளது.