திரைப்பட டம்மி ஆயுதங்கள்: உயா்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திரைப்பட படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமம் வழங்குவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

திரைப்பட படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமம் வழங்குவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகா் சூா்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்பட படப்பிடிப்புக்குத் தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினா் அதனை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ‘தென்னிந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம்’ உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், மும்பை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீஸாா் டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்திலும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் வைத்திருக்கக் கூடிய அனைத்து டம்மி ஆயுதங்களையும் காண்பிக்க வேண்டும் எனவும் அதனை பரிசோதனை செய்த பிறகு அதற்கான அனுமதி சான்றிதழ் வழங்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரா்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையா், மனுதாரா்கள் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அதன்பிறகு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com