தமிழ் எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எழுத்தாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டமானது, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், பத்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜி.திலகவதி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆா்.என்.ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்), கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றவா்களான பொன்.கோதண்டராமன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனாா், கா.ராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியா் விருது பெற்ற மருத்துவா் இரா.கலைக்கோவன் ஆகிய 10 எழுத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மேலே குறிப்பிட்ட 10 பேருக்கும் அவா்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது விரும்பும் மாவட்டத்திலோ வீடுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.