
திருச்சி அரசு மருத்துவமனையில் உணர்வு சிகிச்சை பூங்கா, தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர்.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உணர்வு சிகிச்சை பூங்கா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர், 32 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தனர்.
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் அதன் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிக்க | பள்ளி மாணவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா?
பின்னர், முசிறி வட்டம், ஏவூரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடம்,
மண்ணச்சநல்லூர் ஒன்றியம், திருவெள்ளறை ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தலவிருட்சம் (அசோக வனம்), துறையூர் அரசு மருத்துவமனையில் ரூ. 61.55 லட்சம் மதிப்பீட்டில் 6 டயாலிசிஸ் இயந்திரங்கள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தனர்.
மேலும், துறையூர் அரசு மருத்துவமனையில் ரூ. 5.15 கோடி மதிப்பீட்டில் தாய்-சேய் நல வார்டு பிரிவுக்காக கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், திருச்சி எம்.பி சு. திருநாவுக்கரசர், மேயர் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் அப்துல் சமது, செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.