பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக எழுந்து நின்றவர் ஸ்டாலின் என்றும், அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் என்று திமுக பொதுக்குழுவில் கண்கலங்கி பேசினார் கனிமொழி.
திமுக 15 ஆவது பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக அமைச்சா் துரைமுருகன், பொருளாளராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அண்ணா, கருணாநிதி வகித்துவந்த பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டு நம்மை வழிநடத்துகிறார்.
எந்த நேரத்திலும் கருணாநிதி தனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன் என தனது வாழ்நாள் முழுவதும் இருந்தார். அதேபோன்று பெரியார், அண்ணா கனவுகளையும் அவர் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றி காட்டினார்.
கருணாநிதிக்கு இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாகியிருப்பதாக பலபேர் விமர்சித்தனர்.
பரம்பரை பகைவர்கள் இதனை பயன்படுத்தி சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தனர். ஆனால், பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல், ஆழிப்பேரலையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று அதனை சாதித்து காட்டினார் என புகழாரம் சூட்டினார்.
கருணாநிதியை போன்று எந்த நேரத்திலும் தனது கொள்கையை விட்டு கொடுக்காமல் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சம உரிமையை திமுக ஆட்சி வழங்கி வருகிறது. ஆனால், புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து மீண்டும் பெண்களை வீட்டில் முடக்கும் செயல் நமக்கு எதிராக நடைபெறுவதால் அதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்பா இல்லாத இடத்தில் உங்களை ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக உருக்கமாக பேசிய கனிமொழி, நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுத்து பின்னால் நிற்பேன் என கனிமொழி கூறினார்.