ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் குழந்தையுடன் சென்ற தம்பதி செல்போன் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த பாத்திரக் கடைக்கு நேற்று காலை வெளியூரிலிருந்து கடைக்கு தேவையான பாத்திரங்கள் சரக்கு வாகனத்தில் வந்தது.
இந்த வாகனத்தை ஓட்டிவந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் பாலமுருகன், ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்துவிட்டு, வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு, குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர் செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.