போடி: போடி - மூணாறு சாலையில் அகல ரயில்பாதை இணைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த சாலை போக்குவரத்து புதன்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்கியது.
போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்தில், ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து ரயில் சேவை நடைபெற்று வருகிறது. தற்போது போடி முதல் தேனி வரையிலான அகல ரயில்பாதை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. போடி-தேனி வரையிலான 15 கிலோ மீட்டா் தூரத்திற்கு இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் போடி மூணாறு சாலையின் குறுக்காக ரயில் தண்டவாளங்கள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக போடி மூணாறு சாலையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு 11 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை மூன்று மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தண்டவாளம் அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்.
இதையும் படிக்க | பேஸ்புக் ஒரு பயங்கரவாத அமைப்பு: ரஷியா அதிரடி அறிவிப்பு
இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் 20 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை இணைத்தனர்.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
தண்டவாளம் அமைக்கப்பட்ட பகுதியில் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.