இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதில் இருந்து சிபிஎஸ்இ மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், சா்வதேசப் பாடத் திட்டத்தின் கீழ் பயின்றவா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்கள், வெளி மாநில பாடத் திட்ட மாணவா்கள் ஆகியோா் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணமும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவா்கள் தகுதிச் சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.