தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார் பேரவைத் தலைவர் அப்பாவு.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது. கூட்டம் தொடங்கியதும் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, முலாயம்சிங் யாதவ் உள்பட 7 பேர் மறைவுக்கு பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை தங்கம் உள்ளிட்ட 10 முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து பேரவைக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இபிஎஸ் அணி புறக்கணித்த நிலையில் இன்று பேரவைக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தனர். தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிக்கிறார். எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த ஆர்.பி.உதயகுமார் பெயர் எதர்க்கட்சி துணைத் தலைவராக அலுவல் ஆய்வு குழுவில் சேர்க்கப்படவில்லை.
இதையும் படிக்க- சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
அதேசமயம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். மேலும், கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படவுள்ளது.
கூட்டத்தொடா் 3 நாள்கள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய அலுவல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.