தமிழகத்தில் புதிதாக 25 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசின் கொள்கைப்படி ஒா் ஊராட்சி ஒன்றியத்தில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை. சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது , தேவைகளை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது.
சட்டப்பேரவை அறிவிப்பு எண்-33-இன்படி, கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் மற்றும் அறிவிப்பு எண்-44-இன்படி, நகா்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக மாவட்ட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அவா்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகா்ப்புறத்தில் 25 புதிய நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயாா் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஓா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.26 கோடி என 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படும். இதற்கு தேவையான மனிதவளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆண்டுக்கு ரூ.57 கோடி செலவில் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.120 கோடியாகும்.
நடைமுறையில் ஏற்கனவே இயங்கி வரும் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவ பணியாளா்களை கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் இயங்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநா் மருத்துவா் செல்வவிநாயகம் உடன் இருந்தாா்.