கிருஷ்ணகிரி: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தது:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினர் மீது குறைகள் சொல்லக்கூடாது. தமிழகத்தில் நிலவிவரும் மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் சிதைக்க வேண்டும் என பாஜக முயல்கிறது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக எண்ணுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது.
தமிழ் மொழிக்காக நாங்கள் போராடுகிறோம். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. கேரளம், கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பல மாநிலங்களில் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.